தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று காலை 10 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 இடங்களை பெறாமல் இருந்தது.
இதையடுத்து தவெக தரப்பில் காங்கிரஸ், கம்யூ. கட்சிகள், விசிக கட்சிகளிடம் ஆதரவு கோரப்பட்டது.
தற்போது காங்கிரஸ் கூட்டணி மற்றும் கம்யூ. கட்சிகள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் தவெகவின் பெரும்பான்மை பலம் 120 ஆக உயர்ந்தது. இதைத் தொடர்ந்து தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகர் அழைப்பு விடுத்தார்.
இதன்மூலம், தமிழகத்தில் திராவிட கட்சிகள் அல்லாமல் 3வது கட்சியாக தவெக ஆட்சியமைக்க உள்ளது.
இந்நிலையில், விஜயுடன் பதவியேற்க உள்ள 9 அமைச்சர்கள் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அதன்படி, விஜயுடன் தவெக நிர்வாகிகளான கே.ஏ.செங்கோட்டையன்,, ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த், அருண்ராஜ், நிர்மல்குமார், ராஜ்மோகன், வெங்கடரமணன், டி.கே. பிரபு, கீர்த்தனா ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
தவெக தரப்பில் வழங்கப்பட்ட அமைச்சர்கள் பட்டியலை ஆளுநர் மாளிகை அங்கீகரித்து இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
பதவியேற்பு விழாவையொட்டி, நேரு உள்விளையாட்டு அரங்கத்தை சுற்றி ரசிகர்கள், தொண்டர்கள் கூட்டம் குவிந்துள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


