தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது.
இதையடுத்து விஜய் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த பொறுப்பு ஆளுநர் அர்லேகர் அவருக்கு நேற்று பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து, என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
தொடர்ந்து, நேற்று மாலை தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் கருப்பையா நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், தவெக தலைமையிலான ஆட்சியில் இன்று தமிழகத்தின் 17வது சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள விஜய் உள்ளிட்ட வெற்றி பெற்ற தவெக, திமுக மற்றும் அதிமுக எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
இந்நிலையில், சட்டப்பேரவை முதல் கூட்டத்திற்கு கோட் சூட்டில் வருகை புரிந்துள்ள முதல்வர் விஜய் முதல் நபராக பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார். அப்போது, “சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சி. ஜோசப் விஜய் எனும் நான்”… என தொடங்கி உறுதி ஏற்றார்.
அவரைத் தொடர்ந்து ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவி ஏற்றனர். பெண் அமைச்சர் கீர்த்தனா வெற்றி பெற்ற சான்றிதழை கொண்டு வராததால் பதவியேற்கவில்லை.
முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் தொடங்கி, முன்னாள் முதல்வர்கள், முன்னாள் அமைச்சர்கள் பொறுப்பேற்ற பிறகு, அகர வரிசைப்படி ஒவ்வொருவராக அழைக்கப்பட, சட்டப்பேரவையின் தலைமை செயலர் சீனிவாசன் முன்பு எம்எல்ஏக்கள் பொறுப்பேற்று வருகின்றனர்.


