தமிழகத்தில் இன்று ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டையில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தமிழ்நாட்டில் வரும் 16ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி ஒன்று நிலவுவதாகவும், இதனால் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனால், ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் எனவும், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.
நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய 9 மாவட்டங்களில், வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மே 14ம் தேதி வரை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


