தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. அரசியல் களத்தில் புதிதாக நுழைந்த தவெக 108 இடங்களிலும், ஆளும் கட்சியாக இருந்த திமுக கூட்டணி 73 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.
இந்நிலையில், இபிஎஸ் தலைமையில் அதிமுக ஏற்கனவே 10 தோல்வியை சந்தித்த நிலையில், தற்போது 11வது தோல்வியை சந்தித்துள்ளது.
தேர்தலில் அதிமுக 3வது இடத்தை பிடித்ததால் அக்கட்சியில் உட்கட்சி பூசல் வெளிப்படையாக வெடிக்க தொடங்கியுள்ளது. இபிஎஸ்ஸுக்கு எதிராக மூத்த நிர்வாகிகள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தலைமையில் சுமார் 30க்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்க காத்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் அதிமுக வட்டாரத்தில் மட்டுமின்றி தமிழக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் இபிஎஸ்ஸை நீக்கிவிட்டு, எஸ்.பி.வேலுமணியை அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக தேர்வு செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில், 47 அதிமுக எம்எல்ஏக்களில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்ஸுக்கு ஆதரவாக 17 எம்எல்ஏக்கள் மட்டுமே அதிமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி செயல்பட ஆதரவு தெரிவித்து பேரவை செயலாளர் மற்றும் தற்காலிக சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர்.
இன்றைய சட்டப்பேரவைக் கூட்ட தொடருக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் இபிஎஸ் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தனித்தனி குழுவாகவே சென்றிருந்தனர்.
மேலும், இபிஎஸ் எம்எல்ஏவாக பதவியேற்ற போது சிலரும் எஸ்.பி.வேலுமணி பதவியேற்ற போது பலரும் மேசையை தட்டி வாழ்த்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


