தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய், இன்று பேரவைக் கூட்டம் முடிந்த பின்னர், தலைமை செயலகத்தில் இருந்து புறப்பட்டு நேராக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்திக்க ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டிற்கு சென்றார்.
அங்கு அவரை உதயநிதி ஸ்டாலின் மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஆரத்தழுவி வரவேற்று வீட்டிற்குள் அழைத்து சென்று உபசரித்து பரஸ்பரம் சால்வை, பூங்கொத்து அளித்தனர். அவர்களிடம் தமிழக முதல்வராக பொறுப்பேற்றதற்கு விஜய் வாழ்த்துகளை பெற்றார். அவருக்கு எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் புத்தகம் பரிசளித்தார்.
இந்நிலையில், முதல்வர் விஜய் தனது வீட்டில் சந்தித்தது குறித்து எக்ஸ் தளத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டு உள்ளார்.
அந்த பதிவில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு.விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்” என்று தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.
இதனிடையே, மு.க.ஸ்டாலினை தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அவரது அண்ணாநகர் இல்லத்திலும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை நீலாங்கரை அக்கரையில் உள்ள இல்லத்திலும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் விஜய். இதைத் தொடர்ந்து, முதல்வர் விஜய், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்திக்க இருக்கிறார்.


