அசாம் மாநிலத்தில் மொத்தமுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்.9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் போடோலாந்து மக்கள் முன்னணி (பிபிஎப்), அசாம் கன பரிஷத் ஆகியவை போட்டியிட்டன.
காங்கிரஸ், பத்ருதீன் அஜ்மல் தலைமையிலான அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, அகில் கோகோய் தலைமையிலான ரைஜோர் தளம், திரிணாமுல் காங். கட்சிகள் களமிறங்கின.
இதில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 64 இடங்கள் தேவையான நிலையில், பாஜக 82 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சிகளான பிபிஎப் 10, அசாம் கன பரிஷத் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றன. காங்கிரஸ் 19 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது.
இந்த அமோக வெற்றி மூலம், பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.
இதையடுத்து, ஹிமந்த பிஸ்வா சர்மா தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்க உள்ளதாகக் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் கவுகாத்தியில் நடைபெற்ற என்டிஏ எம்எல்ஏக்கள் கூட்டத்தில், சட்டமன்ற கட்சித் தலைவராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யாவை சந்தித்த ஹிமந்த பிஸ்வா சர்மா ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை ஏற்றுக் கொண்ட ஆளுநர் அவருக்கு ஆட்சி அமைக்கும்படி அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், அசாம் மாநில முதல்வராக ஹிமந்த பிஸ்வா சர்மா மீண்டும் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
அவருடன், பாஜகவைச் சேர்ந்த ரமேஷ்வர் தெலி, அஜந்தா நியோக் ஆகியோரும், அசாம் கன பரிஷத்தைச் சேர்ந்த அதுல் போரா, பிபிஎப்-ஐ சேர்ந்த சரண் போரா ஆகிய 4 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இந்தபதவியேற்பு விழாவில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மே.வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.


