நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்ட 11 வேட்பாளர்களில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்ட காமராஜ் மட்டுமே வெற்றி பெற்றார்.
இவர் திமுக அமைச்சரான டி.ஆர்.பி. ராஜாவை தோற்கடித்து, வெற்றி பெற்றிருந்தார்.
விஜயின் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் ஆட்சி அமைக்க போதிய இடங்கள் இல்லாமல் திணறிய போது, காமராஜ் ஆதரவு அளித்ததாக கூறப்பட்ட கடிதம் போலியானது எனவும் அப்படியானால் ஒரிஜினல் எங்கே என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பி வாதிட்டார்.
இன்று 2வது நாளாக நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் ஆயிரம் விளக்கு தொகுதி தவெக எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் சபாநாயகராக போட்டியின்றி தேர்வானார்.
அதன் பின்னர், எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக பேச சபாநாயகர் வாய்ப்பு வழங்கினார். அப்போது பேசிய அமமுக எம்எல்ஏ காமராஜ் தமிழக இளைஞர்கள் முதலமைச்சர் விஜய் மீது நம்பிக்கை வைத்துள்ளனர், நானும் அவரை நம்புகிறேன்” எனக் கூறி தவெக அரசுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.
இந்நிலையில், அமமுக எம்எல்ஏ காமராஜை, டிடிவி தினகரன் அமமுகவில் இருந்து அதிரடியாக நீக்கி உள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பில் டிடிவி.தினகரன் கூறி இருப்பதாவது:
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.காமராஜ் அவர்கள், கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருப்பது கட்சியின் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணானது.
கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டிற்கு (அதிமுக கூட்டணி ஆதரவு) எதிராக செயல்பட்டதாலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாலும் அவர் நீக்கப்படுகிறார்.
எனவே திரு.S.காமராஜ் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார் என்பதைத் தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இன்று காமராஜ் நேரடியாகவே சட்டமன்றத்தில் தவெகவுக்கு ஆதரவு வழங்கியது கட்சி தலைமைக்கு அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அமமுக தலைமை தெரிவித்துள்ளது.


