திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்திருக்கும் முதலமைச்சர் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தலைவராக ஆயிரம் விளக்கு தொகுதி தவெக எம்எல்ஏ ஜே.சி.டி. பிரபாகர், துணைத் தலைவராக திருச்சி துறையூர் தொகுதி தவெக எம்எல்ஏ ரவிசங்கர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சட்டப்பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.சி.டி. பிரபாகருக்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பேரவை உறுப்பினர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
அந்த வகையில் சட்டப்பேரவையில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், என்னை 2வது முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்த சேப்பாக்கம் தொகுதி மக்களுக்கும் திமுக கூட்டணிக்கு 1.54 கோடி வாக்குகள் தந்த மக்களுக்கும் கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்காக உழைத்த தொண்டர்கள், தோழமை இயக்கத் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
மேலும், நாட்டுக்கே வழிகாட்டியது திராவிட மாடல் ஆட்சி. திமுக எதிரிக்கட்சியாக இல்லாமல் சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும். திமுக எப்போதுமே ஆக்க சக்தியாகவே இருக்கும். பேரவைக்கு வெளியே முதலமைச்சர் காட்டிய அரசியல் நாகரிகம் பேரவையிலும் தொடர வேண்டும். சட்டப்பேரவையை நல்ல முறையில் அவர் வழிநடத்துவார்கள் என்று நம்புகிறோம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக கட்சி வேறுபாடின்றி அனைவரும் முன்வரிசையில் செயல்பட வேண்டும்.
நாட்டையே திரும்பி பார்க்க வைத்தது தமிழ்நாடு சட்டமன்றம். நானும் முதலமைச்சர் விஜயும் ஒரே கல்லூரி முன்னாள் மாணவர்கள். சீனியரான திமுகவின் அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்திக் கொள்ள அரசு முன்வர வேண்டும். அனைவருக்குமான அரசாக இருக்க வேண்டும். எங்களது அனுபவத்தையும் அறிவையும் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம்; பயன்படுத்த அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஆட்சி நிர்வாகத்தில் திமுகவே சீனியர். முதல்வர் பதவியேற்பின்போது தமிழ்த்தாய் வாழ்த்து 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேற்கு வங்க முதல்வர் பதவியேற்பில் வந்தே மாதரம் பாடப்படவில்லை.
முதல்வர் பதவியேற்பில் நடந்த தவறை, சட்டப்பேரவையில் நடக்க அனுமதிக்க மாட்டோம் . தமிழ்நாட்டின் எந்த அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து 2வது இடத்துக்கு தள்ளப்பட கூடாது.
சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாக பாடப்பட வேண்டும். பேரவை மரபுகளை மாற்ற அனுமதிக்க மாட்டோம். திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்திருக்கும் முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து என்று கூறினார்.


