ஈரான் போரினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பு மீதான அழுத்தத்தை குறைக்கவும், ஓராண்டுக்குத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு பிரதமர் மோடி மக்களை வலியுறுத்திய நிலையில், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை அரசு 6%லிருந்து 15% ஆக உயர்த்தியுள்ளது.
உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகர்வோராகவும், மிகப்பெரிய வெள்ளி நுகர்வோராகவும் விளங்கும் இந்தியா, உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய இறக்குமதியை பெருமளவில் சார்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் ஏற்கனவே உயர்ந்துள்ள காலகட்டத்தில், இந்த நடவடிக்கை நுகர்வைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், விலைமதிப்புள்ள உலோகங்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கவும், ஒரு டாலருக்கு 95.75 என்ற வரலாறு காணாத வீழ்ச்சியை எட்டியுள்ள இந்திய ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்தவும், மத்திய அரசு 10% அடிப்படை சுங்கவரியுடன் 5% வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரியையும் (ஏஐடிசி) விதித்துள்ளது.
இந்த வரி உயர்வு இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த உதவும் என்று கூறப்படுகிறது. மேற்கு ஆசிய நெருக்கடிக்கு மத்தியில், குடிமக்கள் தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறும், எரிபொருள் பயன்பாட்டை குறைக்குமாறும் பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு, சிக்கன நடவடிக்கைக்கு கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து இந்த வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளியின் மீதான இறக்குமதி வரி உயர்வால் கடத்தல் சம்பவங்கள் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்று தொழில்துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அதே நேரம், தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் கூறுகையில், உலகப் பொருளாதார வரிசையில் தற்போது ஏற்பட்டு வரும் மாற்றங்கள் எளிதில் மாறப்போவதில்லை. நடப்பு நிதியாண்டின் முக்கிய பொருளாதாரக் கடமைகளில் ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையாமல் தடுப்பதே என்றும் தெரிவித்தார்.


