சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது.
ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.
சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள், டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தங்கத்தின் விலை அதிகரித்தது. இதனால் நடுத்தர வர்க்க மக்கள் தங்கம் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஓரிரு நாட்கள் விலை குறைவதும் அதற்கு மறுநாள் விலை அதிகரிப்பதுமாக திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகளுக்காக நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
கடந்த 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை, 4 நாட்களாக தங்கம் விலையில் எந்த மாற்றமுமில்லாமல் கிராம் ரூ.14,150க்கும் சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகி வந்தது.
வாரத்தின் தொடக்க நாளான திங்களன்று (மே 11) ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து விற்பனையான நிலையில், நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து விற்பனையானது.
இந்நிலையில், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6%லிருந்து 15% ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளதால், 22 காரட் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு அதிரடியாக ரூ.8,560 உயர்ந்து சவரன் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் கிராமுக்கு ரூ.1,070 அதிகரித்து கிராம் ரூ.15,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே நேரம், சில்லறை வர்த்தகத்தில் சென்னையில் வெள்ளி விலை நேற்று கிராமுக்கு ரூ.15, கிலோவுக்கு ரூ.15,000 உயர்ந்து விற்பனையான நிலையில், இன்று வெள்ளி விலையும் அதிரடியாக ரூ.30,000 ஆக இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
அதன்படி, இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து கிராம் ரூ.330க்கும் கிலோ கட்டி வெள்ளி விலை ரூ.30,000 உயர்ந்து 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இது திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு நகை வாங்கும் தேவையில் உள்ள மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி, வேதனையை ஏற்படுத்தியுள்ளது.


