தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக இன்று வரை பொறுப்பு ஆளுநர் அர்லேகர் கெடு விதித்திருந்தார்.
அதன்படி, தவெக தலைமையிலான அரசுக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.
இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடியதும் முதலமைச்சர் விஜய் தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். காங்கிரஸ் வழிமொழிந்தது.
இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் உரையாற்றினர்.
பேரவையில் இந்த தீர்மானம் மீது பேசிய தேமுதிக பிரேமலதா விஜயகாந்த், “முதலமைச்சராக விஜய் செய்த நல்ல விஷயங்களை பாராட்டி இருக்கிறோம். எதிர்க்கட்சிகளை எதிரி கட்சியாக நினைக்காமல், அனைவரையும் சந்தித்து அரசியலில் ஒரு மாண்பையும், மரபையும் நீங்கள் ஏற்படுத்தியது வரவேற்கத்தக்கது. அதுபோல உங்களுடைய முதல் அறிவிப்பிலேயே பெண்களை பாதுகாக்கவும், மதுக்கடைகளை மூடுவோம் என்று சொன்னதும் மக்களால் வரவேற்கப்பட்டது. முதலில் 717 மது கடைகளை மூடியது ஒட்டுமொத்த தமிழக மக்களால் வரவேற்கப்பட்டது. இவை அனைத்தையும் தேமுதிக வரவேற்கிறது.
உங்களுடைய ஆட்சி வெளிப்படையான ஆட்சியாக இருக்கும், மக்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் முன்னுதாரணமான ஆட்சியாக இருக்கும் என்று சொன்னீர்கள்.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த அவையில் முதல் முறையாக மன வேதனையுடன் சொல்கிறேன். குதிரை பேரம் நடந்ததாக எதிர்கட்சிகள் சொல்லும் போது, இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் நடக்காத விஷயம் ஏற்பட்டது மன வேதனை அடைகிறேன். இங்கு யாரும் முகத்தை மூடி செல்ல வேண்டிய அவசியம் இல்லையென என முதலமைச்சர் கூறினார்.
ஆனால் முதலமைச்சரை சந்திக்க முதலமைச்சர் விஜய்யின் இல்லத்திற்கு இன்னோவா காரில் யார் முகத்தை மூடிக்கொண்டு ரகசியமாகச் சென்ற நபர் யார்? என்பதற்கு முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும், வெளிப்படையாக விளக்க வேண்டும். அதற்கு காரணம் குதிரை பேரம் என்றால் அதற்கு மேல் தலைக்குனிவு இல்லை என சரமாரி கேள்வி எழுப்பினார்.
மேலும், ஜோதிடர் ராதன் பண்டிட் முதல்வரின் சிறப்பு பணி அலுவரலாக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உங்கள் ராஜகுருவாக இருந்தால் பர்சனலாக வைத்துக்கொள்ளுங்கள். எதற்கு அரசு பதவி? என பேரவையில் விஜயிடம் கேள்வி எழுப்பி தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் சரமாரி விளாசினார்.


