தமிழகத்தின் 17வது சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்றது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றுள்ள நிலையில், கடந்த 2 நாட்களும் சட்டப்பேரவையில் அனைத்து எம்எல்ஏக்களும், சட்டப்பேரவைத் தலைவர், சட்டப்பேரவை துணைத் தலைவர் பதவியேற்றனர். தொடர்ந்து இன்று தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.
அப்போது அனைத்து கட்சி உறுப்பினர்களும் வரிசையாக எழுந்து தங்களது ஆதரவு, எதிர்ப்பை கூறி கருத்தை பதிவு செய்தனர்.
இதன்போது, பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், புதிய ஆட்சி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. அதற்கு முன்பு வாக்கு எண்ணிக்கையில் தொடங்கி 10 நாட்களாக இந்த ஆட்சியில் நடந்ததை எதிர்க்கட்சியாக சில விமர்சனங்களை வைக்க விரும்புகிறேன். தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க வேண்டும் என பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்கவில்லை. 3.21 கோடி பேர் இந்த அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். உங்களுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் மத்தியிலேயே தற்போது ஆதரவு குறைந்து கொண்டு வருகிறது எனக் கூறினார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 65% மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆட்சியின் மீது நம்பிக்கை குறைந்து வருகிறது. உங்கள் கட்சிக்கு 108 இடங்கள்தான் உள்ளது. 234 கொண்ட உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவையில் 118 உறுப்பினர்களை கொண்ட கட்சியோ, கூட்டணியோ தான் ஆட்சிக்கு வர முடியும்.
ஆனால் தவெகவுக்கு 108 இடங்கள் தான் இருக்கிறது. வெற்றி மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால் தான் முதல்வர் 2 இடங்களில் போட்டியிட்டு இன்று ஒரு தொகுதியை ராஜினாமா செய்துள்ளார். ஆளும் கட்சிக்கும் 106 இடங்கள் தான் இருக்கிறது. வாக்களித்த மக்களுக்கு இன்னமும் முதல்வர் நன்றி கூட சொல்லவில்லை. திருப்பத்தூர் உறுப்பினர் வாக்கெடுப்பில் பங்கேற்க கூடாது என்பது நீதிமன்றத்தின் உத்தரவு என்று தெரிவித்தார்.
கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவிக்க குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பது தான் காரணம். இப்பவும் திமுக தலைமையிலான கூட்டணியில் தான் தொடர்வோம் எனவும் அவர்கள் சொல்லியுள்ளனர். மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என சொன்னார்கள்.
ஆனால் தற்போது கொள்கை எதிரி என சொன்ன என் டி ஏ கூட்டணியில் போட்டியிட்ட உறுப்பினர் ஒருவரை ஆதரவு தெரிவிக்க வைத்துள்ளீர்கள். அந்த கட்சித் தலைவருக்கே தெரியாம இந்த கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க வைத்துள்ளீர்கள். அந்த கட்சித் தலைவர் டிடிவி தினகரன் சொன்னது என்னவென்றால் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குதிரை பேரம் என்று சுட்டிக்காட்டி பேசினார்.
புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டத்திற்கு மாதாமாதம் 7ம் தேதி கொடுத்து வந்தோம். ஆனால் இந்த மாதம் இன்னும் வரவில்லை. மக்கள் நலத் திட்டங்களில் அரசியல் செய்ய வேண்டாம். இந்த மாதம் 15ம் தேதி மகளிர் உரிமைத் தொகைக்காக மகளிர் காத்துக் கொண்டிருக்கின்றனர். வெற்றி பெற்ற பிறகாவது மக்கள் நம்பிக்கையை பெறும் வகையில் பணிகளை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
முதல்வர் அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் காத்திருக்கும் அனைவரையும் நீண்ட நாள் காத்திருக்க வைக்க வேண்டாம். மகளிருக்கு மாதம் ரூ.2500, ஆண்டுக்கு ஆறு சிலிண்டர், தங்க செயின், மோதிரம், என தவெகவின் வாக்குறுதிகள் நீண்டு கொண்டே இருக்கிறது.
அவற்றில் ஒரு சில வாக்குறுதிகளை கூட முதல் கையெழுத்தில் கொண்டுவரவில்லை. புதுமையான ஆட்சி என சொல்லிவிட்டு புஷ்பா பட ஆட்சி நடைபெற்று வருகிறது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆட்சியாக இல்லாமல், ரியல் ஆட்சியாக நடத்துங்கள் எனக் கூறி வெளிநடப்பு செய்தார்.


