தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக இன்று வரை பொறுப்பு ஆளுநர் அர்லேகர் கெடு விதித்திருந்தார்.
அதன்படி, தவெக தலைமையிலான அரசுக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.
இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடியதும் முதலமைச்சர் விஜய் தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். காங்கிரஸ் வழிமொழிந்தது.
ஆரம்பத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல், மன்னார்குடி எம்எல்ஏ கமாராஜ் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.
தொடர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தில் தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த், பாமக எம்எல்ஏ செளமியா அன்புமணி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பேசினர்.
இதில், அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி தரப்பும் ஆதரவு தெரிவித்தது. இறுதியில், சட்டப்பேரவை யின் அனைத்து நுழைவு வாயில்களையும் மூட சபாநயாகர் ஜே.சி.டி.பிரபாகர் உத்தரவிட்டார்.
சட்டப்பேரவை 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. உறுப்பினர்களை எழுந்து நிற்கவைத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதல் பிரிவில் 30 எம்எல்ஏக்களும், 2வது பிரிவில் 42 எம்எல்ஏக்களும், 3வது பிரிவில் 46 எம்எல்ஏக்களும், 4வது பிரிவில் எஸ்.பி.வேலுமணி தரப்பு 25 அதிமுக எம்எல்ஏக்களும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். 5 மற்றும் 6வது பிரிவுகளில் தவெக அரசை ஆதரிப்பதாக 144 உறுப்பினர்கள் கூறியதால் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி பெற்றது. இதனால் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தொடர்கிறது.
இந்த வாக்கெடுப்பில், மொத்தமுள்ள 234 சட்டப்பேரவை உறுப்பினர்களில் விஜய், தனது கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். அடுத்து, நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து திருப்பத்தூர் தவெக எம்எல்ஏ பேரவைக்கு வரவில்லை. சபாநாயகரின் ஒரு ஓட்டு கணக்கில் வராது. இந்த மூன்றும்போக மொத்த எண்ணிக்கை 231 ஆகும். இதிலும், 2 மதிமுக எம்எல்ஏக்கள் பேரவைக்கு வரவில்லை.
மீதமுள்ள 229 எம்எல்ஏக்களில் வாக்கெடுப்பின் போது பேரவையில் இருந்தவர்கள் 171 உறுப்பினர்கள். இவர்களில் 144 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். 22 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 5 எம்எல்ஏக்கள் நடுநிலை வகித்தனர்.
அதிமுக உறுப்பினர்களில் இபிஎஸ்ஸுக்கு ஆதரவாக 22 எம்எல்ஏக்களும், எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக 25 உறுப்பினர்களும் உள்ளனர். இவர்களில் எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவன 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


