நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால் எதிர்கட்சி அந்தஸ்த்தையும் இழந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் பொறுப்பேற்ற பிறகு, ஏற்கனவே 10 தோல்விகளை சந்தித்த நிலையில், தற்போதைய தோல்வியும் சேர்ந்து 11வது முறையாக அதிமுக தொடர் தோல்வியை சந்தித்துள்ளது.
இதனால் கட்சியின் மூத்த அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்ததால், அவர்கள் இபிஎஸ்ஸுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.
இதனிடையே, தவெக தலைவர் விஜய்க்கு ஆட்சி அமைக்க போதிய ஆதரவு இல்லாத போது, திமுக-அதிமுக கூட்டணி அமைப்பதாக பேச்சுவார்த்தை நடந்ததாகவும் திமுக அமைச்சரவையில் இடம் பெறாமல் அதிமுகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து இபிஎஸ்ஸை முதல்வராக்கவும் திட்டமிடப்பட்டதாக தகவல் வெளியானது.
இது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் இபிஎஸ் கலந்து ஆலோசித்த போது, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்டோர் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, தவெகவுக்கு ஆதரவு கொடுக்க பெரும்பாலான அதிமுக எம்எல்ஏக்கள் தயாராக இருப்பதாக சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி வீட்டில் தனித்தனியாக நடத்திய ஆலோசனையில் முடிவெடுக்கப்பட்டது.
இந்த கலவரத்தினால் அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி தலைமையிலும் இபிஎஸ் தலைமையிலும் எம்எல்ஏக்கள் தனித்தனியாக பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர்கள் கே.சி.கருப்பணன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 17 எம்எல்ஏக்கள் மட்டும் தற்காலிக சபாநாயகரை சந்தித்து ஆதரவு கடிதம் வழங்கினர்.
அதே போல், சி.வி. சண்முகம் தலைமையில் அவர்கள் தரப்பு அதிமுக எம்எல்ஏக்களும் எஸ்.பி.வேலுமணியை சட்டமன்ற கட்சித் தலைவராக அங்கீகரிக்க கோரி தற்காலிக சபாநாயகர் கருப்பையாவை சந்தித்து ஆதரவு கடிதம் வழங்கினர்.
இன்று நடைபெற்ற பேரவைக் கூட்டத் தொடரில் தவெக அரசு மீதான நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் எஸ்.பி. வேலுமணி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேரும் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ளது தெளிவாகி உள்ளது.
இந்நிலையில், பேரவைக் கூட்டத்துக்கு பின்னர் எம்ஆர்சி நகரில் உள்ள இல்லத்தில் சி.வி. சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் எனக் கூறினார்.
மேலும், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கியதே சசிகலாதான். கட்சியில் இப்போது உள்ளவர்களை குறை சொல்லி வெளியே அனுப்பக் கூடாது. அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்பதுதான், எங்களின் நோக்கம். அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை இணைத்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.


