நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால் எதிர்கட்சி அந்தஸ்த்தையும் இழந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் பொறுப்பேற்ற பிறகு, ஏற்கனவே 10 தோல்விகளை சந்தித்த நிலையில், தற்போதைய தோல்வியையும் சேர்த்து 11வது முறையாக அதிமுக தொடர் தோல்வியை சந்தித்துள்ளது.
அதன் பிறகு நடந்த ஆலோசனை கூட்டத்தில் தவெக ஆதரவு நிலைப்பாடு குறித்து முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்டோர் எடுத்து கூறிய போது, இபிஎஸ் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
இதனால் கட்சியின் மூத்த அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கடும் அதிருப்தி உடன் இபிஎஸ்ஸுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இதனிடையே, தவெகவுக்கு ஆதரவு கொடுக்க பெரும்பாலான அதிமுக எம்எல்ஏக்கள் தயாராக இருப்பதாக சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தெரிவித்தனர்.
இந்த கலவரத்தினால் அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி தலைமையிலும் இபிஎஸ் தலைமையிலும் எம்எல்ஏக்கள் தனித்தனியாக பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர்கள் கே.சி.கருப்பணன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 17 எம்எல்ஏக்கள் மட்டும் தற்காலிக சபாநாயகரை சந்தித்து ஆதரவு கடிதம் வழங்கினர்.
அதே போல், சி.வி. சண்முகம் தலைமையில் அவர்கள் தரப்பு அதிமுக எம்எல்ஏக்களும் எஸ்.பி.வேலுமணியை சட்டமன்ற கட்சித் தலைவராக அங்கீகரிக்க கோரி தற்காலிக சபாநாயகர் கருப்பையாவை சந்தித்து ஆதரவு கடிதம் வழங்கினர்.
நேற்று நடைபெற்ற பேரவைக் கூட்டத் தொடரில் தவெக அரசு மீதான நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் எஸ்.பி. வேலுமணி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேரும் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ளது தெளிவாகி உள்ளது.
இதையடுத்து, தவெகவுக்கு ஆதரவு அளித்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்பட 26 அதிமுக மாவட்ட செயலாளர்கள் நீக்கப்பட்டனர். அதிமுக உட்கட்சி மோதலால் பல மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர்களின் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் இபிஎஸ் – எஸ்.பி.வேலுமணி தரப்பு மோதல் அதிமுகவில் முற்றியுள்ளது.
இந்த பதற்றம் காரணமாக சென்னை ராயபேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிமுக அலுவலக வாயிலில் தடுப்பு அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் அசாதாரணக் கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கவும், அசம்பாவிதங்களைத் தடுக்கவும் தற்காலிக சோதனைச் சாவடிகளை அமைத்து, சிறப்புப் பாதுகாப்புக் குழுக்கள் கண்காணித்து வருகின்றன. அதிமுக அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


