நாடு முழுவதும் கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு சராசரியாக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களில் விலை உயரும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் ரூ.100.80க்கு விற்பனையான பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்து, தற்போது ரூ.103.98க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல், டீசல் விலை ரூ.95.50 ஆக இருந்த நிலையில், தற்போது லிட்டருக்கு ரூ.3.11 உயர்த்தப்பட்டு, ஒரு லிட்டர் டீசல் விலை தற்போது ரூ.98.61ஆக உள்ளது.
மேற்கு ஆசிய நாடுகளின் போரினால், முக்கிய சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்திருப்பதன் எதிரொலியாக இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை ஏற்கனவே உயர்ந்துள்ளது.
இதனிடையே, இந்தியாவில் சில தனியார் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தின. எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரித்தது.
இந்நிலையில், இந்தியாவில் நாடு முழுவதும் தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி விடுத்த செய்தியில், தேசத்தின் நலன் கருதி எரிபொருள் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளவும் எரிபொருள் வாங்க செலவிடும் அந்நியச் செலாவணியை, பெட்ரோல் மற்றும் டீசலை சேமிப்பதன் மூலம் மிச்சப்படுத்துவது எல்லோரது பொறுப்பாகும் என்று கூறியிருந்தார்.
தற்போதைய பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பேருந்து கட்டணம், சரக்கு போக்குவரத்து செலவு, காய்கறி, பழங்கள், பால், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே நாட்டின் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3% ஆக உயர்ந்துள்ள நிலையில், எரிபொருள் விலை உயர்வால் அனைத்து தரப்பினரும் கூடுதல் பொருளாதாரச் சுமையை எதிர்கொள்ளும் நிலையை ஏற்படுத்தும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், சிஎன்ஜி எரிவாயு விலையும் கிலோவுக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளதால், ஆட்டோ மற்றும் வாடகை கார் கட்டணங்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரக் கூடும் என்பதால், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாக திரும்பப் பெறவும் தமிழக அரசு வரிக்குறைப்பு நடவடிக்கை எடுக்கும்படியும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


