தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1ம் தேதி தொடங்கும் நிலையில், இந்தாண்டு மே 26ம் தேதிக்குள் கேரளாவை அடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டும் தென்மேற்கு பருவமழை மே 24ம் தேதி தொடங்கிய நிலையில், இந்தாண்டும் முன்கூட்டியே வர வாய்ப்புள்ளதாகவும் இந்த கணிப்பில் 4 நாட்கள் முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ மாறுபடலாம் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
இந்த பருவமழை முன்னேற்றத்தின் காரணமாகத் தமிழகத்தின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தேனி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.
அதே போல், திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, நகரின் ஒரு சில பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
அதே போல், தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை மே 26ம் தேதியே தொடங்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தமான் கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடல், அந்தமான் கடல், அந்தமான் நிகோபார் தீவுகளின் சில பகுதிகளில் தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் வழக்கத்தை விட இந்தாண்டு 5 நாட்களுக்கு முன்பே தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


