அண்டை மாநிலமான கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளுக்கு கடந்த ஏப்.9ம் தேதி புதுச்சேரி மற்றும் அசாம் மாநிலங்களுடன் சேர்த்து ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் ஆளும் இடதுசாரி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) கூட்டணி 37.34% வாக்கு சதவீதத்துடன் 35 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டது.
கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) 46.55% வாக்கு சதவீதத்துடன் 102 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதி பெரும்பான்மை பெற்றது.
இருப்பினும், கேரள காங்கிரஸில் நிலவும் உள்கட்சி பூசலினால், தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களாகியும் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வதில் பெரும் குழப்பம் நீடித்தது. முதல்வர் தேர்வு போட்டியில் கே.சி. வேணுகோபால், சதீசன், ரமேஷ் சென்னிதலா இடையே கடும் போட்டி நிலவியது.
இந்த நிலையில், டெல்லியில் காங்.தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் நடந்த ஆலோசனையில் வி.டி. சதீசன் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
இது கே.சி. வேணுகோபாலுக்கும், ரமேஷ் சென்னிதலாவுக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கே.சி. வேணுகோபாலுக்கு காங்கிரசில் உயர் பதவி வழங்குவதாகவும், ரமேஷ் சென்னிதலாவுக்கு உள்துறை அமைச்சர் பதவி வழங்குவதாகவும் உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து இருவரும் சமாதானம் ஆனார்கள்.
இதனிடையே, கேரள புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட விடி.சதீசன் அம்மாநில ஆளுநர் அர்லேகரை நேற்று முன்தினம் நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
இந்நிலையில், கேரளத்தின் புதிய முதலமைச்சராக வி.டி.சதீசன் பதவியேற்றார். அவருடன் ரமேஷ் சென்னிதலா, குஞ்சாலிகுட்டி ஆகியோருக்கும் ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். காங்கிரசைச் சேர்ந்த 11 பேர், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 10 பேருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான புதிய அரசின் பதவியேற்பு விழா இன்று காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார் மற்றும் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்றனர்.
பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை.


