தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 73 இடங்களில் வென்று வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது. நடந்து முடிந்த பேரவைக் கூட்டத் தொடரில் திமுக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சிறந்த எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டதாக பல தரப்பினரும் பாராட்டினர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவெக அரசு அமைய இடையூறாக இருக்கப்போவதில்லை எனவும் புதிதாக அமைந்துள்ள தவெக அரசுக்கு எந்த வகையிலும் தொந்தரவு கொடுக்காமல், 6 மாதங்களுக்கு பொறுமை காப்போம் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், புதிய அரசு ஆட்சி நடத்த நாம் தொந்தரவாக இருக்கப் போவதில்லை; ஆனால், இயலாமையை மறைக்க நம் மேல் அவதூறுகள் கொண்டு தாக்கினால் விளக்கம் அளிப்போம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பான மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பதிவில், தஞ்சைத் தரணியில் அன்புச் சகோதரர் பூண்டி கலைவாணன் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன். பூண்டி கிருஷ்ணசாமி, பூண்டி கலைச்செல்வன் எனக் கழகத்துக்காகவே தம் வாழ்வை ஒப்படைத்துக் கொண்ட கழகக் குடும்ப விழா இது!
சிறிய இடைவெளிக்குப் பிறகு, வெளியூர் வருகிறேன். நேற்று, திருச்சியில் இறங்கியது முதலே கழக உடன்பிறப்புகளும் மக்களும் என்னைக் கண்டதும் வெளிப்படுத்திய உணர்வினை நான் புரிந்துகொண்டேன். உங்களை நானறிவேன். என்னை நீங்கள் அறிவீர்கள். நமக்குள் வார்த்தைகள் தேவையில்லை.
ஒரு புதிய அரசு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆட்சி நடத்த நாம் தொந்தரவாக இருக்கப் போவதில்லை. நடத்தட்டும்! ஆனால், இயலாமையை மறைக்க நம் மேல் அவதூறுகள் கொண்டு தாக்கினால் விளக்கம் அளிப்போம். சமூக ஊடகங்களில் பொய்களைப் பரப்பினால் உண்மையைப் போட்டுடைப்போம் என உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.


