தன்னை தமிழக முதல்வராக்க பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது வதந்தி என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கமளித்து உள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன.
வாக்கு எண்ணிக்கை முடிவில், 108 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்ற தவெக ஆட்சி அமைக்க தேவையான 118 என்ற மேஜிக் நம்பர் இல்லாமல் திணறியது.
அப்போது திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கூட்டணி தர்மத்தை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் தொடர்வதாக அறிவித்த கம்யூ. கட்சிகள், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்டவற்றின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைந்துள்ளது.
தவெக அரசு ஆட்சி அமைப்பதை தடுக்க திமுக, அதிமுக இணைந்து கூட்டணி உருவாக்கி இபிஎஸ்ஸை முதல்வராக்க திட்டமிட்டதாக தகவல் வெளியானது. இதன் அடிப்படையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிமுக தற்போது இரண்டாக பிளவுபட்டுள்ளது.
இதனிடையே, திமுக ஆதரவுடன் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வராக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், திமுக – அதிமுக கூட்டணி பேசுவதாக வெளியான தகவல்கள் அடிப்படையிலேயே முன்பு கருத்து கூறியிருந்தேன்.
என்னை முதல்வராக்க திமுக மற்றும் அதிமுக கட்சிகள் என இரு தரப்பிலும் இப்படியொரு முடிவை எடுக்கிறோம். அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு கொடுங்கள் என யாரும் அதிகாரப்பூர்வமாக எதுவும் பேசவில்லை என்று குறிப்பிட்டார்.
தற்போது வரை திமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம், தமிழ்நாட்டில் நிலவிய தேர்தல் முடிவு நெருக்கடியை பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிட கூடாது, மறுபடியும் ஒரு தேர்தல் வந்து விட கூடாது என்பதால் மட்டுமே தவெகவுக்கு ஆதரவு, அதுவும் வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவை அளித்து உள்ளதாகவும் திருமாவளவன் குறிப்பிட்டார்.
மேலும், 2 இடங்களை வைத்து கொண்டு விசிக யாரிடமும் பேரம் பேசவில்லை என்றும் ஒருவேளை வருங்காலத்தில் அதிமுக, தவெகவுக்கு ஆதரவு அளித்தால், எங்களுடைய ஆதரவைத் தொடர்வது குறித்து நிர்வாகிகளிடம் பேசி உரிய முடிவெடுப்போம் எனவும் திருமாவளவன் கூறியுள்ளார்.


