தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உடன் முதல்வர் விஜய் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில், திட்டமிட்டப்படி ஜூன் 1ம் தேதி திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக அரசு வெற்றி பெற்று திமுக கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைத்துள்ளது.
முதல்வராக விஜய் பதவியேற்ற போது அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர். இவர்களுக்கான துறைகள் அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சென்னை தலைமைச்செயலகத்தில் துறைகள் ஒதுக்கப்பட்ட 9 அமைச்சர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார். இதன் போது தங்கள் துறையின் தேவைகள், பொதுமக்களின் எதிர்பார்ப்பு ஆகியவை குறித்து அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.
இதனையடுத்து, கோடைகால விடுமுறை முடித்து பள்ளிகள் திறப்பு குறித்தும், நாளை மறுநாள் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு தொடர்பாகவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.
இதில் பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள், செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர், இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் நாளை மறுநாள் (மே 20) 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திட்டமிட்டப்படி ஜூன் 1ம் தேதி திங்களன்று பள்ளிகள் திறக்கப்படும் எனவும் 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்புகளுக்கு ஜூன் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.


