தமிழ் சினிமாவில் பல படங்களில் ஸ்டண்ட் கலைஞராக பணியாற்றி பின்னர் நகைச்சுவை நடிகராக வளர்ந்தவர் முத்துக்காளை. இவர் வைகைபுயல் வடிவேலு உடன் நடித்த காமெடி காட்சிகள் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.
இவர் மின்சார கண்ணா',தமிழன்’, யூத்',திருப்பாச்சி’, `சிவகாசி’ உள்ளிட்ட படங்களில் முதல்வர் விஜய் நடிகராக இருந்த போது அவருடன் நடித்தவர்.
குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு வந்த முத்துக்காளை, கல்வியில் கவனம் செலுத்த ஆரம்பித்து, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு படித்தார்.
தனது விடா முயற்சியால், அண்மையில் தான் இளங்கலை தமிழ் இலக்கியத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதித்தார். ஏற்கனவே, முத்துக்காளை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2017ம் ஆண்டு இளங்கலை வரலாறும், 2019ம் ஆண்டு தமிழில் முதுகலை பட்டமும் பெற்றார்.
மதுப் பழக்கத்திற்கு அடிமையானாலும் அதில் இருந்து மீண்டு வந்து சாதிக்க வேண்டும் என்ற தனது எண்ணத்திற்கு கல்வியே அடித்தளமாக மாற்றிய முத்துக்காளைக்கு அண்மைகாலமாக சினிமாவில் பெரிய வாய்ப்புகள் வரவில்லை.
இந்நிலையில், முத்துக்காளையின் மனைவி மாலதிக்கு (வயது 47), திடீரென மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதற்கு பின்னரும் மாலதியின் உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்து வந்தது.
இதனிடையே, இவர் முதல்வர் விஜயிடம் தன் மனைவியை காப்பாற்றக்கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோவில், கீழ்பாக்கம் கேஎம்சி மருத்துவமனையில் தனது மனைவி மாலதி, தலையில் ஏற்பட்ட ரத்தக்கசிவுக்காக அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை முடிந்து 17 நாட்களான பின்பும் அதனால் ஏற்பட்ட நுரையீரல் உட்பட சின்ன சின்ன தொற்றுகளால் மூச்சுவிட முடியாமல் சிரமப்படுவதாகவும் கூறியிருந்தார்.
மேலும், இந்த நேரத்தில் தமிழக முதல்வ விஜய் தன்னுடைய மனைவியின் மேல் சிகிச்சைக்கு உதவி செய்து மனைவியின் உயிரை காப்பாற்றும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதாகப் பேசியிருந்தார்.
இதன் எதிரொலியாக முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை முத்துக்காளையுடன் தொலைபேசியில் பேச வைத்ததுடன், அமைச்சர் ராஜ் மோகனை நேரடியாக சென்று நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு அனுப்பினார். முத்துக்காளையின் மனைவிக்கு உயர் சிகிச்சை அளிக்கவும் முதல்வர் விஜய் உத்தரவிட்டிருந்தார்.
இந்த சூழலில், கடந்த 19 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் முத்துக்காளை மனைவி, இன்று காலை காலமானார்.
அவரது உடல் இறுதி சடங்கிற்காக விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தாலுகா, சங்கம்பட்டி என்ற திருக்கோதையாபுரம் எடுத்துச் செல்லப்படுகிறது. நடிகர் முத்துக்காளை அவரது மனைவியின் உடலை ஆம்புலன்ஸில் எடுத்துச் சென்றுள்ளார். இறுதிச்சடங்கு இன்றிரவு அவரின் சொந்த ஊரில் நடைபெறுகிறது.


