நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன.
வாக்கு எண்ணிக்கை முடிவில், 108 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்ற தவெக ஆட்சி அமைக்க தேவையான 118 என்ற மேஜிக் நம்பர் இல்லாமல் திணறியது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 73 இடங்களில் வென்று வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது. நடந்து முடிந்த பேரவைக் கூட்டத் தொடரில் திமுக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சிறந்த எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டதாக பல தரப்பினரும் பாராட்டினர்.
அப்போது திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கூட்டணி தர்மத்தை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் தொடர்வதாக அறிவித்த கம்யூ. கட்சிகள், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்டவற்றின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைந்துள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவெக அரசு அமைய இடையூறாக இருக்கப்போவதில்லை எனவும் புதிதாக அமைந்துள்ள தவெக அரசுக்கு எந்த வகையிலும் தொந்தரவு கொடுக்காமல், 6 மாதங்களுக்கு பொறுமை காப்போம் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தேர்தல் தோல்வியால் திமுக சிதறிவிடவில்லை என்று கூறியுள்ள அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆட்சியின் திட்டங்கள் தொடர்வதால் தற்போதும் திமுகதான் ஆட்சியில் இருப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் நடைபெற்ற திருவாரூர் மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான பூண்டி கலைவாணன் மகள் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினார்.
அப்போது பேசிய அவர், வெற்றி, தோல்வியை சமமாக கருதி பாடுபடுபவர்கள் திமுக தொண்டர்கள் எனவும் இந்த தேர்தலில் திமுக படுதோல்வியடைந்துவிட்டதைப் போன்ற தோற்றத்தை இன எதிரிகள் ஏற்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
மேலும், தேர்தல் தோல்வியால் திமுக சிதறிவிடவில்லை, சோர்ந்துவிடவில்லை என்று கூறிய மு.க.ஸ்டாலின், திமுக தோல்வியடைந்ததற்காக யாரும் சோகமாக இருக்க வேண்டியதில்லை எனவும் தெரிவித்தார்.


