கோடைக்காலம் தொடங்கியது முதல், அதிலும் குறிப்பாக கடந்த 4ம் தேதி அக்னி வெயில் துவங்கிய பிறகு,தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
தமிழகத்தில் நேற்று 15 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்துள்ளது.
அதிகபட்சமாக வேலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 104.4 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னை, மதுரை, ஈரோடு, கரூர், மற்றும் சேலம் போன்ற பிற மாவட்டங்களிலும் வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகிறது.
இந்நிலையில், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று 46 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு இருப்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான என்ஜிஓ அமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் கொளுத்தி வரும் நிலையில், சென்னையில் நேற்று பல இடங்களில் வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸாக இருந்ததாகவும், கடல்காற்று தாமதமாக தரைப்பகுதிக்கு வந்ததால் நகரின் உள்பகுதிகளில் வெப்பநிலை குறையவில்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகளாவிய வெப்பநிலை குறியீடு (யூடிசிஐ) இன்று நண்பகல் 46 டிகிரி செல்சியஸை தொட வாய்ப்புள்ளதாகவும், தமிழ் நாட்டின் பல மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு 38 டிகிரி செல்சியஸை கடக்க கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் யூடிசிஐ அளவு 46 டிகிரி செல்சியஸை எட்டக்கூடும் என்பதால், அதிக வெயில் நேரங்களில் திறந்தவெளி கடின வேலைகளை நிறுத்தவும், அடுத்த சில நாட்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட்டு மக்களைக் காக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கும்படியும் அந்த என்ஜிஓ அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க, பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்கவும், தர்பூசணி, மோர், இளநீர் மற்றும் எலுமிச்சை சாறு போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளவும், நீர்ச்சத்து குறையாமல் இருக்கத் தொடர்ந்து தண்ணீர் அருந்தவும் அறிவுறுத்தப்படுகிறது.


