சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது.
ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.
சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள், டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தங்கத்தின் விலை அதிகரித்தது. இதனால் நடுத்தர வர்க்க மக்கள் தங்கம் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த மாத தொடக்கத்தில் இருந்தே ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஓரிரு நாட்கள் விலை குறைவதும் அதற்கு மறுநாள் விலை அதிகரிப்பதுமாக திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகளுக்காக நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
வாரத்தின் முதல் நாளான திங்களன்று தங்கம் விலை எந்த மாற்றமுமின்றி விற்பனையான நிலையில், செவ்வாயன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்தும், புதனன்று சவரனுக்கு ரூ.960 குறைந்தும், நேற்று சவரனுக்கு ரூ.480 உயர்ந்தும் விற்பனையானது.
தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.480 உயர்ந்த நிலையில், இன்று அதில் சரிபாதி அளவாக சவரனுக்கு ரூ.240ம், கிராமுக்கு ரூ.30ம் குறைந்து, சவரன் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் கிராம் ரூ.14,780க்கும் விற்பனையாகிறது.
அதே நேரம், சில்லறை வர்த்தகத்தில் சென்னையில் வெள்ளி விலை நேற்று கிலோவுக்கு ரூ.5,000 அதிகரித்த நிலையில், இன்று கிலோவுக்கு மீண்டும் ரூ.5,000 உயர்ந்துள்ளது.
அதன்படி, வெள்ளி விலை இன்று கிராம் ரூ.295க்கும் கிலோ கட்டி வெள்ளி விலை 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.


