தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜயின் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையில், திமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
அதைத் தொடர்ந்து, விஜய் முதலமைச்சராக கடந்த 10ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருடன் என்.ஆனந்த், செங்கோட்டையன் உள்பட 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
இந்த சூழலில், தமிழக அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்பட 23 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
முன்னதாக, தவெகவுக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு தருவதாகவும் அமைச்சரவையில் பங்கேற்கவில்லை எனவும் கூறியிருந்த விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள், தவெக விருப்பத்தின் காரணமாக தாங்கள் அமைச்சரவையில் இணைவதாக இருகட்சிகளும் உறுதிபடுத்தியிருந்தன.
இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடந்த பதவியேற்பு விழாவில் விசிக திண்டிவனம் சட்டப்பேரவை உறுப்பினர் வன்னியரசு மற்றும் ஐயூஎம்எல் கட்சியின் பாபநாசம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஷாஜகான் ஆகியோர் ஆளுநர் முன்னிலையில் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
வன்னியரசுக்கு சமூக நீதித் துறையும், ஷாஜகானுக்கு சிறுபான்மை நலத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. வன்னியரசு அமைச்சராக பதவியேற்றிருப்பதன் மூலம், தவெக அமைச்சரவையில் பட்டியலின அமைச்சர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.


