தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜயின் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையில், திமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
அதைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சராக விஜய் கடந்த 10ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருடன் என்.ஆனந்த், செங்கோட்டையன் உள்பட 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
இந்த சூழலில், தமிழக அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருவர் உள்பட 23 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
முன்னதாக, தவெகவுக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு தருவதாகவும் அமைச்சரவையில் பங்கேற்கவில்லை எனவும் கூறியிருந்த விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள், தவெக விருப்பத்தின் காரணமாக தாங்கள் அமைச்சரவையில் இணைவதை உறுதிபடுத்தின.
இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடந்த பதவியேற்பு விழாவில், திண்டிவனம் சட்டப்பேரவை உறுப்பினர் வன்னியரசு (விசிக) மற்றும் பாபநாசம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஷாஜகான் (ஐயூஎம்எல்) ஆகியோர் ஆளுநர் முன்னிலையில் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
வன்னியரசுக்கு சமூக நீதித் துறையும், ஷாஜகானுக்கு சிறுபான்மை நலத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. வன்னியரசு அமைச்சராக பதவியேற்றிருப்பதன் மூலம், தவெக அமைச்சரவையில் பட்டியலின அமைச்சர்களின் எண்ணிக்கை 8 ஆகவும் அமைச்சர்கள் எண்ணிக்கை 35 ஆகவும் உயர்ந்துள்ளது.
கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவுடன் கூட்டணி அமைத்து பல்வேறு தேர்தல்களை சந்தித்த விசிக தவெக அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தவெக அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள் இணைந்தது குறித்து திமுக மூத்த தலைவர் ஆ.ராசா கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஏணி சின்னத்தைக் குறிப்பிட்டு ஐயூஎம்எல் கட்சியையும், சிறுத்தையை குறிப்பிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் கடுமையாக சாடி உள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’, மூட சாதியை நொறுக்க வேண்டிய சிறுத்தையும் வெறும் விசில் சத்தத்திற்கு ஆதரவாகிவிட்டதாகவும் அத்துடன், காலதேச வர்த்தமானத்திற்கு காத்திருப்போம், வெற்றி நமக்கே என அவர் குறிப்பிட்டுள்ளார். திமுக மூத்த நிர்வாகியின் இந்த கருத்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


