தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலம் தொகுதியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தனது மாநிலங்களவை பதவியை சிவி சண்முகம் ராஜினாமா செய்திருந்தார். இதனால் காலியாகியுள்ள இடத்துக்கு ஜூன் 18ல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த 2021ல் நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சி.வி. சண்முகம் 2022ல் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவரது பதவிக்காலம் வரும் 2028 ஜூன் 29 வரை உள்ள நிலையில், நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மாநிலங்களவை உறுப்பினர் பதவியை சிவிஎஸ் ராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில், காலியாகவுள்ள மாநிலங்களவை இடத்துக்கு ஜூன் 18ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 1ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தற்போதே ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
அதன்படி, சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையிலேயே உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும் என்பதால், தற்போது ஆளுங்கட்சியாகவுள்ள தவெகவுக்கே அதிக வாய்ப்புள்ளது.
இருப்பினும், அந்த மாநிலங்களவை எம்.பி. இடத்தை தனது கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு தவெக தர வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
யாரும் போட்டியிட நிலையில், தேர்தல் நடத்தாமல் மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு செய்யப்படுவர்.
அதே நேரம், தவெகவில் இருந்து ஒருவர் மாநிலங்களவை இடத்திற்கு தேர்வாகும் பட்சத்தில், இது அக்கட்சியின் முதல் டெல்லி அரசியல் நுழைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
அதே போல, மகாராஷ்டிரா முன்னாள் துணை முதல்வர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் மாநிலங்களவை எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அந்த இடத்துக்கும் ஜூன் 18 இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.


