தவெக தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று இரண்டாம் முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடந்த பதவியேற்பு விழாவில், திண்டிவனம் எம்எல்ஏவும், விசிக துணைப் பொதுச்செயலாளருமான வன்னியரசு தமிழக அரசின் சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார்.
அதே போல், பாபநாசம் தொகுதி எம்எல்ஏவும் ஐயூஎம்எல் கட்சியை சேர்ந்தவருமான ஷாஜகானும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார்.
இதனிடையே, திமுக கூட்டணியில் தொடர்வதாகவும், வெளியில் இருந்து மட்டுமே ஆதரவளிப்பதாகவும், அமைச்சரவையில் இடம்பெற மாட்டோம் என்றும் கடந்த வாரம் வரை கூறி வந்த திமுக தோழமை கட்சிகளான விசிக, ஐயூஎம்எல் ஆகியவை தாங்கள் கூறியதற்கு மாறாக தற்போது தவெக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளன.
இந்த இருகட்சிகளின் சொல்லும், செயலும் சில நாட்களிலேயே மாறியதால் திமுக மூத்த தலைவர்கள், திமுக உறுப்பினர்கள், தொண்டர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் இக்கட்சிகளை கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் “மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு.வன்னியரசு அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்!
தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.
பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்” என்று கூறியுள்ளார்.


