தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜயின் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையில், திமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைத்தது.
இந்த சூழலில், தமிழக அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருவர் உள்பட 23 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
முன்னதாக, தவெகவுக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு தருவதாகவும் அமைச்சரவையில் பங்கேற்கவில்லை எனவும் கூறியிருந்த விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள், தவெக விருப்பத்தின் காரணமாக தாங்கள் அமைச்சரவையில் இணைவதை உறுதிபடுத்தின.
இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடந்த பதவியேற்பு விழாவில், திண்டிவனம் சட்டப்பேரவை உறுப்பினர் வன்னியரசு (விசிக) மற்றும் பாபநாசம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஷாஜகான் (ஐயூஎம்எல்) ஆகியோர் ஆளுநர் முன்னிலையில் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, திமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் விசிக, ஐயூஎம்எல் கட்சிகளை கடுமையாக சாடி சமூக வலைதளங்களில் பதிவிடத் தொடங்கினர். இதற்கு விசிக தரப்பிலும் கடும் பதிலடி தாக்குதல் கொடுக்கப்பட்டு, இரு தரப்பும் வார்த்தைப் போரில் ஈடுபட்டன.
இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், தோழமைகள் யார் மனதையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சொல்லாமல் திமுகவை விட்டுச் சென்று, தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது காங்கிரஸ் செய்த துரோகம் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘திமுகவை விட்டுச் சென்றவர்கள் பற்றி எல்லாம் திமுகவுக்கு கவலை இல்லை. திமுகவுக்கு இது எல்லாம் புதிதல்ல. தமிழ்நாட்டில் முதல்முறையாக ஒரு அணியில் வெற்றி பெற்று மற்றொரு அணியில் சேர்ந்துள்ளார்கள்’ என்று விமர்சித்தார்.


