நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலம் தொகுதியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தனது மாநிலங்களவை பதவியை சிவி சண்முகம் ராஜினாமா செய்திருந்தார். இதனால் காலியாகியுள்ள இடத்துக்கு ஜூன் 18ல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த 2021ல் நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சி.வி. சண்முகம் 2022ல் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவரது பதவிக்காலம் வரும் 2028 ஜூன் 29 வரை உள்ள நிலையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மாநிலங்களவை உறுப்பினர் பதவியை சிவிஎஸ் ராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில், காலியாகவுள்ள மாநிலங்களவை இடத்துக்கு ஜூன் 18ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 1ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தற்போதே ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், மாநிலங்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி வேட்பாளராக களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தவெக – காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


