கேரள சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் தற்காலிக சபாநாயகர் ஜி. சுதாகரன் முன்னிலையில் 139 எம்எல்ஏக்கள் பதவியேற்றனர்.
இந்நிலையில், நேற்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் கூட்டணி சார்பில் முன்னாள் அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணனும், இடதுசாரி கூட்டணி சார்பில் முன்னாள் அமைச்சர் ஏ.சி. மொய்தீனும், பாஜ சார்பில் கோபகுமாரும் போட்டியிட்டனர்.
கேரள சட்டப்பேரவை வரலாற்றில் சபாநாயகர் பதவிக்கு இம்முறை தான் பாஜக முதன்முதலாக போட்டியிட்டது. முதல்வர் வி.டி. சதீசன், முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், பாஜ மாநிலத் தலைவரும், நேமம் தொகுதி எம்எல்ஏவுமான ராஜீவ் சந்திரசேகர் உள்பட அனைத்து எம்எல்ஏக்களும் வாக்களித்தனர்.
இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இவருக்கு 101 ஓட்டுகளும், ஏ.சி. மொய்தீனுக்கு 35 ஓட்டுகளும், கோபகுமாருக்கு 3 ஓட்டுகளும் கிடைத்தன.
புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, திருவஞ்சூர் ராதாகிருஷ்ணனை முதல்வர் வி.டி. சதீசன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பினராயி விஜயன் ஆகியோர் சேர்ந்து சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.
திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் கடந்த 1991 முதல் எம்எல்ஏவாக இருந்து வருகிறார். 2004 மற்றும் 2011ம் ஆண்டு காலகட்டத்தில் உம்மன்சாண்டி அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். வரும் 29ம் தேதி ஆளுநர் அர்லேகர் சட்டப்பேரவையில் உரையாற்றுகிறார்.
இதனிடையே, இடதுசாரி கூட்டணி எதிர்க்கட்சித் தலைவராக பினராயி விஜயனை அறிவித்தது. இதற்கு நேற்று சபாநாயகர் அனுமதி அளித்தார்.
கேரளத்தில் கடந்த 10 வருடங்கள் முதல்வராக இருந்த பினராயி விஜயனுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது அவர் முதல்வர் பதவியில் இல்லை என்பதால் அவருக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிளஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. அவருக்கு தற்போது ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.


