தவெக அமைச்சரவையில் விசிக இணைந்த முடிவிற்கு பதவி ஆசை காரணம் அல்ல என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விசிகவுக்கும் திமுகவுக்கும் இடையே கொள்கை புரிதல் உள்ளதாகவும் தமிழ்நாட்டின் நிலவிய அரசியல் நெருக்கடியால் தான் தவெக அரசுக்கு விசிக ஆதரவளித்தது என்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவார் என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன்னை துருப்பு சீட்டாக பயன்படுத்தி கடந்த இரண்டு ஆண்டுகளாகவே திமுக கூட்டணியை உடைக்க சதி நடந்தது. ஆனால் நான் எதற்கும் வளைந்து கொடுத்தது இல்லை. என்னை துருப்புச் சீட்டாக பயன்படுத்தி திமுக கூட்டணியை சிதறடிக்க பல தரப்பில் இருந்தும் முயற்சித்தனர். ஆனால் திமுக கூட்டணியை பலவீனப்படுத்த விட மாட்டேன் என உறுதியாக நின்று அதனை நடத்தியும் காட்டினேன்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி நீடிக்க வேண்டும் என்பதற்காக என்னாலான முயற்சிகளை செய்தேன். ஆனால் தேர்தல் முடிவுகளுக்குப் பின் இந்தக் கூட்டணியை காப்பாற்றும் வலிமை எனக்கு இல்லை.
குறிப்பாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுத்த முடிவை நிறுத்த எனக்கு வலிமை இல்லை. அதே போல் தான் ஐயூஎம்எல் கட்சியின் நிலைப்பாட்டில் என்னால் தலையிட முடியாது. ஆனால் சமூக வலைதளங்களில் என்னை மட்டும் குறிவைத்து அவதூறு கணைகளை ஏவுவது ஏன் என்று தெரியவில்லை என கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய திருமாவளவன், நானே அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற கருத்து வந்தபோது, அதற்கு உடனடியாக இணங்கவில்லை. என்னுடைய தனிப்பட்ட விருப்பம் வெளியில் இருந்து ஆதரவு என்பதே.
கட்சி தலைவரானாலும் பெரும்பாலான உறுப்பினர்களின் கருத்தை கேட்டு அதற்கேற்ப முடிவை எடுக்க வேண்டியது என்னுடைய கடமை. எனவே விசிக உறுப்பினர்களின் கருத்தை ஏற்று கொண்டு அமைச்சரவையில் இடம்பெறலாம் என்று முடிவெடுத்த போது, அதற்கு வன்னி அரசை பரிந்துரைப்பதே சரி என முடிவு செய்தேன்.
தவெக அமைச்சரவையில் இடம்பெற்றது குறித்து மேற்கொண்டு கருத்து சொல்ல எதுவுமில்லை. பிற்கால தேர்தல் கூட்டணி பற்றிய கேள்விக்கு, தேர்தல் நேரத்தில் தான் யாருடன் பயணிப்பது, கூட்டணி என்பது குறித்த முடிவுகளை எடுப்பது வழக்கம் என்று திருமா கூறினார்.


