நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இந்த தொகுதியில் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
தவெக சார்பில் முன்னாள் அமைச்சரான கு.ப. கிருஷ்ணன் மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இவர் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தவெக சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டு அதிமுக தரப்பு வேட்பாளர் லீமா ரோஸிடம் 2,739 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார்.
இதனிடையே, கு.ப.கிருஷ்ணன் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால், திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் பந்தயத்தில் இருந்து அவர் விலகி கொண்டதாக கருதப்படுகிறது.
இத்தொகுதியில் விசிகவின் தலைவர் திருமா போட்டியிடக் கூடும் எனவும் கூறப்பட்டது. இருப்பினும், திருமா நேரடியாக அமைச்சரவையில் பங்கு பெறாமல் திண்டிவனம் சட்டப்பேரவை உறுப்பினர் வன்னியரசை அமைச்சரவைக்கு அனுப்பினார். எனவே, திருமா மாநில அரசியலுக்குத் திரும்புவது தள்ளிப் போவதாகவே தெரிகிறது.
இந்நிலையில் தான் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தனியார் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியின் மாணவர்கள், முதலமைச்சர் விஜயின் வாழ்க்கை பயணத்தை பழங்களைக் கொண்டு சிற்ப கண்காட்சி அமைத்தனர்.
‘இளைய தளபதி முதல் முதலமைச்சர் வரை’ என்ற கருத்தில் உருவாக்கப்பட்ட இந்த சிற்ப கண்காட்சியை சின்னத்திரை நடிகரும், விஜயின் நண்பருமான சஞ்சீவ் திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய சஞ்சீவ், தனக்கும் விஜய்க்கும் 35 ஆண்டுகால நட்பு இருப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதா அல்லது ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுத்தால் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சஞ்சீவ், “இதை பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. இருப்பினும், அது அந்த சூழ்நிலையை பொறுத்தது.” எனக் கூறினார்.
மேலும், விஜய் வராத விழாவிற்கு உங்களை எதிர்பார்க்கலாமா என்ற கேள்விக்கு, “ஒரேயடியாக 35 வருட நட்பை முடித்து விடுவீர்கள் போலத் தெரிகிறது. என்னை கூப்பிடும் விழாவுக்கு போவேன். விஜய் பங்கேற்க வேண்டிய விழாவில் அவருக்கு பதிலாக எப்படி செல்ல முடியும். நட்பு முறிந்துவிடும்” என்று பதிலளித்தார்.


