சொத்துகளுக்கான உயிலை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தியப் பதிவுச் சட்டம், 1908ன் படி, உயிலைப் பதிவு செய்வது கட்டாயமற்றது; விருப்பத்திற்குரியது. எனவே, பதிவு செய்யப்படாத உயிலும் சட்டப்பூர்வமாகச் செல்லுபடியாகும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பதிவு செய்யப்படாத உயிலின் உண்மைத் தன்மையை நீதிமன்றத்தில் முறையாக நிரூபித்தால், அது முழுமையாகச் செல்லுபடியாகும் எனவும் உயில் பதிவு செய்யப்படவில்லை என்பதற்காக மட்டும் அந்த உயிலின் நம்பகத்தன்மையைச் சந்தேகிக்க முடியாது என்றும் கூறியுள்ளது.
அசையும் அல்லது அசையாச் சொத்துக்கள் என எவ்விதச் சொத்தாக இருந்தாலும், உயிலை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வது கட்டாயமில்லை.
ஒரு உயில் பதிவு செய்யப்படவில்லை என்பதற்காக மட்டுமே அதைச் செல்லாதது என்றோ அல்லது அதன் உண்மைத்தன்மை அற்றது என்றோ நீதிமன்றம் கருத முடியாது.
உயில் எழுதுபவர் நல்ல மனநிலை மற்றும் சுயநினைவோடு இருக்கும்போது எழுதப்பட்டதாக இருக்க வேண்டும். அதை உறுதிப்படுத்தக் கண்டிப்பாக இரண்டு சாட்சிகள் முன்னிலையில் கையொப்பமிட வேண்டும்.
உயிலைப் பதிவு செய்வது கட்டாயம் இல்லை என்றாலும், சாத்தியமான சேதங்கள் அல்லது அழிவிலிருந்து அதைப் பாதுகாக்கப் பதிவு செய்வது நல்லது. எதிர்காலத்தில் சொத்து வாரிசுகளுக்கு இடையே வரக்கூடிய தேவையற்ற சட்டச் சிக்கல்கள் மற்றும் ஏமாற்று வேலைகளைத் தவிர்க்கப் பதிவு செய்யப்பட்ட உயில் பெரிதும் உதவுகிறது.
இந்நிலையில், இந்திய சட்டப்படி உயில்களை பதிவு செய்ய வேண்டியது இல்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். சொத்து உயிலை பதிவு செய்ய வேண்டியது இந்திய சட்டப்படி கட்டாயம் அல்ல, உயிலை பதிவு செய்யாததாலேயே அதன் நம்பகத்தன்மையை கேள்வி எழுப்ப முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


