நாடு முழுவதும் இன்னும் 5 நாட்களுக்கு வெப்ப அலை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
கோடை வெயில் காரணமாக நாடு முழுவதும் குறிப்பாக வடமாநிலங்களில் வெப்ப அலை மிகவும் கடுமையாக இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதுவரை இல்லாத வகையில் வடமாநிலங்களில் வெப்ப அலை மிகவும் மோசமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் கூறுகின்றன.
வெப்ப அலை காரணமாக தெலங்கானாவில் கடந்த 2 நாட்களில் மட்டும் 16 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு தரப்பிலும், சுமார் 51 பேர் வரை உயிரிழந்துள்ளதாக ஊடகத் தரப்பிலும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே கோடை வெப்பத்தின் தொடர்ச்சியாக மேலும் சில நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில் வடமேற்கு, மத்திய மற்றும் கிழக்கு இந்திய பகுதிகளில் கடும் வெப்ப அலை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
பஞ்சாப், அரியானா, டெல்லி, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 5 வட மாநிலங்களில் மிக கடுமையான வெப்ப அலை வரும் மே 29 வரை நீடிக்கும் எனவும் எச்சரித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்த வரை கடலோர மாவட்டங்கள் உட்பட பல பகுதிகளில் இயல்பை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


