ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பில் நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, வர்த்தகம், தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் வல்லுநர்களுக்கு மத்திய அரசு சார்பில் பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய 3 விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், 2026ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுபவர்களின் விவரத்தை கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினத்தன்று மத்திய அரசு வெளியிட்டது.
அந்த பட்டியலில் 113 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 12 பேரும், புதுச்சேரியை சேர்ந்த ஒருவரும் இடம்பெற்றிருந்தனர். முறையே, 13 பத்மபூஷண் விருதுகளும், 5 பத்ம விபூஷண் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் முதல்கட்டமாக பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட 12 தமிழர்கள் உள்ளிட்ட 66 பேருக்கு 2 பத்ம விபூஷண், 6 பத்ம பூஷண், 58 பத்மஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று பத்ம விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.
இந்த விழாவில் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த விழாவில் மருத்துவத் துறையில் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவர் கல்லிப்பட்டி ராமசாமி பழனிசாமி, பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள ஹெச்.வி.ஹண்டே ஆகியோர் விருது பெறுகின்றனர்.
அதே போல், கலைத் துறையில் மறைந்த ஆர்.கிருஷ்ணன் கிட்னாவுக்கு இன்று பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. மேலும் குடியுரிமைப் பணித்துறையில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட விஜய் குமார், இலக்கியம் மற்றும் கல்வித் துறையைச் சார்ந்த சிவசங்கரி, வானொலி ஒலிபரப்பு துறையைச் சார்ந்த ஸ்ரீதர், கலைத்துறையில் சாதனை புரிந்தமைக்காக சுவாமிநாதன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.
இவர்களுடன் சேர்ந்து மொத்தம் 66 பேர் இன்று பத்ம விருதுகளை குடியரசுத் தலைவரிடம் இருந்து பெறுகின்றனர்.
இதையடுத்து, பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நடிகர்கள் மாதவன், மம்மூட்டி உள்ளிட்டோருக்கு அடுத்த கட்டமாக நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளது.


