நாடு முழுவதும் கடந்த 12 நாட்களில், 4வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு சுமார் ரூ.7 வரை உயர்ந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை தவிர்க்க பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 வரை உயரக் கூடும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பரிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்குத் தெரியவில்லையா? என மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பான அவரது சமூக வலைதளப் பதிவில், பெட்ரோல்-டீசல் விலையை இரண்டு வாரங்களில் நான்கு முறை உயர்த்தி உள்ளது மத்திய பாஜக அரசு. இன்று பெட்ரோல் ரூ 107.77 டீசல் ரூ 99.55. இதில் தோட்டத்தில் பாதி கிணறு என்பது போல மத்திய – மாநில அரசுகள் வரிமூலம் வருவாயாக பெறுவது மட்டும் 50 சதவீதம்.
உங்களால் சர்வதேச சந்தையில் விலையை குறைக்க முடியாது. அமெரிக்கா- ஈரான் சண்டையை நிறுத்த முடியாது. விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா? அரசுக்கு வரும் வரி வருவாயில் இருந்து மக்களுக்கு விலையை குறைத்து நிவாரண வழங்க மத்திய – மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.


