வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையை பொறுத்து பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஜூன் 1ம் தேதி பள்ளி திறப்பு என அறிவித்திருந்தோம். ஆனால், பல்வேறு தரப்பில் இருந்து அதை மறுபரிசீலனை செய்யும்படி கோரிக்கை எழுந்தது.
எனவே, இது தொடர்பாக அறிவியல் பூர்வமான சில தகவல்களை வானிலை ஆய்வு மையத்திடம் கேட்கப்பட்டுள்ளது. குறிப்பாக அந்த ஒருவாரம் கோடை காலம் இருக்குமா? வெப்ப அலை இருக்குமா? அல்லது பருவமழை தொடங்கிவிடுமா? என்பது தொடர்பான கோப்புகள் கோரப்பட்டுள்ளது. அவை வந்த பிறகு முதல்வரிடம் சமர்ப்பித்து, என்ன முடிவு எடுக்கலாம் என ஆலோசித்து அறிவிக்கப்படும்.
பள்ளிகளில் பாடத்திற்காக செலவு செய்யும் நேரம் 1,050 லிருந்து 950 ஆக குறைந்துள்ளது. 10 நாள்கள் தள்ளி பள்ளியைத் திறந்தால் அதனை எப்படி சரிக்கட்டுவது என்பதும் உள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையைப் பொறுத்து முடிவு எடுக்கப்படும். 3ம் வகுப்பு வரையிலானவர்களுக்கு ஜூன் 4ம் தேதிதான் பள்ளி தொடங்கும்.
பள்ளிக் குழந்தைகளுக்கு நடைபெறும் பாலியல் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பான புகார் அளிப்பதற்கான எண்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு, அலுவலர்களிடமும் கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
காலை மற்றும் மதிய உணவுத் திட்டங்கள் தொடரும். அந்தத் திட்டங்களை மேம்படுத்துவோம். குழந்தைகளைப் பாதிக்கும் எதையும் அரசு செய்யாது. தற்போது உள்ள காலை உணவுப் பட்டியலை ஏற்கனவே பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகுதான் வழங்கி இருப்பார்கள். எனவே, மாற்றி அமைப்பது தொடர்பாக காலத்தின் தேவைக்கு ஏற்ப, பள்ளிக் குழந்தைகளின் மனதை அறிந்து மேம்படுத்தப்படும்.
பள்ளிக் கல்வித்துறையில் பணத்தைக் கொடுத்தோ, சிபாரிசு மூலமாகவோ வேலை வாங்கலாம் என்ற காலம் முடிந்துவிட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதியானவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பள்ளிக் கல்வித்துறை பழைய பழக்க வழக்கங்கள், மூட நம்பிக்கைகளை புறம்தள்ளி அறிவியல் கண்டுபிடிப்புகள், சமத்துவம், சமூக நீதிக்கு முன்னுரிமை கொடுப்பதுதான் பள்ளிக் கல்வித்துறை.
இங்கு வேற்றுமைக்கு இடம் கிடையாது. மாணவர்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த பல்வேறு திட்டங்கள் மற்றும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் சாதிய வேற்றுமைகளுக்கு இடம் கிடையாது. மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தவெக அரசு இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளது என்று கூறினார்.


