இபிஎஸ், சிவிஎஸ்-எஸ்பிவி கூட்டணி என அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா ஆகியோர் இன்று சபநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தனர்.
இதைத் தொடர்ந்து, தலைமை செயலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து தங்களை தவெகவில் இணைத்து கொண்டுள்ளனர்.
முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் போது இந்த மூவருக்குமே அவர்கள் போட்டியிட்ட தொகுதிகளிலேயே தவெக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தனது அறைக்கு வருகை தந்த மூவரையும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சால்வை போட்டு வரவேற்று தவெகவில் சேர்த்து கொண்டுள்ளார். அவர்களுக்கு தலைமைச்செயலகத்தில் வைத்தே தவெக உறுப்பினர் அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு மாநில அரசின் நிர்வாகத் தலைமையிடமாக இருக்கும் தலைமைச்செயலகத்திற்கும், கட்சி அலுவலகத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்களாக தவெகவினர் இருப்பதாக, எதிர்க்கட்சியான திமுக கடுமையாக சாடி உள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மூன்று எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்த சில நிமிடங்களிலேயே, அதுவும் தலைமை செயலகத்திலேயே கட்சி தாவி இருக்கும் நிலையில், யாருக்கெல்லாம் பணம் சென்றது என்பது குறித்த தகவல் வெளிவரும். அதே போல தவெகவுக்கு எதற்காக கட்சி தாவி இருக்கிறார்கள், என்ற தகவலும் விரைவில் அதிகாரபூர்வமாக வெளிவரும் என்றார்.
இதனிடையே, தமிழ்நாடு மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசு தலைமைச் செயலகத்துக்குள் அதிகாரத் திமிரில் அமர்ந்துகொண்டு, எதிர்கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் அருவருப்பான ‘குதிரை பேரத்தை’ கூச்சமே இல்லாமல் நடத்துகிறீர்களே.. இதுதான் நீங்கள் முழங்கிய மாற்று அரசியலா?
தலைமைச் செயலகத்திற்குள் ‘நிழல் முதல்வர்’ முன்னிலையில் உங்கள் கட்சியில் இணைக்கிறீர்கள் என்றால், அரசாங்க அலுவலகத்தை எந்த அளவுக்குக் கேவலப்படுத்தி வைத்திருக்கிறீர்கள்? இது அரசு அலுவலகமா அல்லது உங்கள் கட்சியின் வியாபாரக் கூடமா? என்று திமுக சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.


