தவெக அரசின் செயல்பாடு விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி; மாபெரும் நம்பிக்கை மோசடி. இது போன்ற நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா சிஎம் சார்? என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், “பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது தவெக அரசு. மேலும், தேர்தல் பிரச்சாரத்தின் போது, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள். ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள்.
இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி; மாபெரும் நம்பிக்கை மோசடி. ஏற்கனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள். இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், மோசடி செய்கிறார்கள். இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா சிஎம் சார்? என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.


