சென்னையில் கடந்த 2 வாரங்களில் 2வது முறையாக சிஎன்ஜி எரிவாயு விலை மீண்டும் ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாடகை ஆட்டோ, கார் ஓட்டுனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மேற்காசிய போர் காரணமாக, கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் முடக்கியது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல், எரிவாயு விநியோகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த சூழலில் ஆட்டோ, கார்களுக்கு பயன்படுத்தப்படும் சிஎன்ஜி எரிவாயு விலை கடந்த 2 வாரங்களில் 2வது முறையாக கிலோவுக்கு ரூ.2 உயர்ந்துள்ளது.
சென்னையில் சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்ந்து, தற்போது கிலோ ரூ.93.50க்கு விற்பனையாகி வருகிறது. ஏற்கனவே கடந்த 15ம் தேதி கிலோவுக்கு ரூ.2 உயர்த்தப்பட்ட நிலையில், இன்று கிலோவுக்கு மீண்டும் ரூ.2 உயர்ந்து ரூ.93.50க்கு விற்கப்படுகிறது.
இதனால், வாடகை ஆட்டோ, கார் ஓட்டுனர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், வாடகை ஆட்டோ, கார் பயணத்தின் வாடகை உயரக் கூடும் என்ற அச்சத்திலும் கவலையிலும் பொதுமக்கள் ஆழ்ந்துள்ளனர்.


