நாடு முழுவதும் கடந்த 2 வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை 5வது முறையாக இன்று மீண்டும் உயர்த்தப்பட்டிருப்பது வாகன ஓட்டிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதுடன், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரக்கூடும் என்ற அச்சத்தையும் கவலையையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக சந்தையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு விரும்பவில்லை.
இந்த சூழலில் சமீபத்தில் 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்ததும், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு வழக்கம் போல் பெட்ரோல், டீசல் விலையை படிப்படியாக உயர்த்தி வருகிறது. கடந்த 2 வாரங்களில் மட்டும் பெட்ரோல் டீசல் விலை இன்றுடன் சேர்த்து 5 முறை உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 15, 19, 23, 25 தேதிகளில் சராசரியாக லிட்டருக்கு ரூ.7.50 வரை உயர்த்தப்பட்டாலும், அது எண்ணெய் நிறுவனங்களின் ஒட்டுமொத்த உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் செலவை ஈடுகட்டப் போதுமானதாக இல்லை என்று பொருளாதார வல்லுநர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
நோமுரா மற்றும் எலாரா கேபிடல் நிறுவனங்களின் கூட்டு ஆய்வறிக்கையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விற்பனை மூலம் ஐஓசி, பிபிஎல், எச்பிஎல் ஆகிய அரசு நிறுவனங்களுக்கு தினமும் 1,380 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், இழப்பை சரிகட்ட பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் வரை உயர்த்தப்படலாம் என்று கூறப்பட்டிருந்தது.
இதனிடையே, 4வது முறையாக நேற்று பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.46 அதிகரித்து 107.77 ரூபாய்க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.57 அதிகரித்து ரூ.99.55க்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில், இன்று 5வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து 108.01 ரூபாய்க்கும் டீசல் விலை 23 காசுகள் உயர்ந்து ரூ.99.78க்கும் விற்கப்படுகிறது.
மேற்கு ஆசிய நாடுகளின் போரினால், முக்கிய சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், நாடு முழுவதும் சிஎன்ஜி எரிவாயு விலையும் கடந்த 2 வாரங்களில் 2வது முறையாக இன்று கிலோவுக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கடந்த 15ம் தேதி கிலோவுக்கு ரூ.2 உயர்த்தப்பட்டு கிலோ ரூ.91.50க்கு விற்பனையான சிஎன்ஜி இன்று ரூ.93.50 ஆக விற்பனையாகிறது.
தற்போதைய பெட்ரோல், டீசல், சிஎன்ஜி விலை உயர்வால் பேருந்து கட்டணம், சரக்கு போக்குவரத்து செலவு, காய்கறி, பழங்கள், பால், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2 வாரங்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு சாரசரியாக ரூ.7.75 வரையிலும் சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.4 வரையிலும் உயர்ந்திருப்பது வாகன ஓட்டிகள் மற்றும் சாமானிய மக்களிடம் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.


