அம்பசாமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் வழங்கினார்.
நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்த நிலையில், இன்று மேலும் ஒரு அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருப்பது தமிழக அரசியல் களத்தில் குறிப்பாக அதிமுகவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் அதிமுக, இபிஎஸ் அணி மற்றும் சிவிஎஸ் அணி என இரு பிரிவாக பிரிந்தது. இதில் சிவிஎஸ் தரப்பினர் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதலால் அக்கட்சி இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது.
இதில் எஸ்பிவி தரப்புக்கு ஆதரவாக இருந்து வந்த அதிமுக எம்எல்ஏக்களில் மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா ஆகிய மூவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் நேற்று தவெகவில் இணைந்தனர்.
சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து 3 எம்எல்ஏக்களும் ராஜினாமா கடிதங்களை வழங்கினர். அதிமுக ஏற்கனவே இரண்டு அணிகளாக பிரிந்து செயல்படும் நிலையில், எஸ்பிவி அணியைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து கட்சியை விட்டு வெளியேறுவது, அக்கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் நேற்று ராஜினாமா செய்த நிலையில் மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் ஆகிய தொகுதிகள் காலியானதாக சட்டமன்ற செயலகம் இன்று அறிவித்தது.
இதனால், முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியுடன் சேர்த்து தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், அம்பசாமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் ஜேசிடி பிரபாகரனின் அறிவுறுத்தலின்படி, அவர் கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை அவரிடம் வழங்கினார்.
முன்னதாக, பிரிண்ட் செய்து கொடுத்த ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, அவர் தனது கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அதை சபாநாயகரும் ஏற்றுக் கொண்டார்.
ஏற்கனவே 2 அணிகளாக செயல்பட்டு வரும் அதிமுகவில் எஸ்பிவி தரப்பு ஆதரவு எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்து வருவது தமிழக அரசியலில் அதிமுகவின் நிலை என்ன என்ற கேள்வியை எழுப்பி இருப்பதுடன், முக்கிய பேசுபொருளாகவும் மாறியுள்ளது.


