கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு கடன் தொகை முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதே போல, ரூ.50,000 வரை கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு அந்த தொகையில் ரூ.25,000 (50%) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் 14.23 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
வேளாண் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான ஆய்வுக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வேளாண்துறை அமைச்சர் வினோத், கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ், நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடந்த 2025ம் ஆண்டு மே 1ம் தேதி முதல் 2026 பிப்.28ம் தேதிவரை பெற்ற பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய முடிவு எடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு, அந்த கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் விஜய் உத்தரவிட்டார்.
அதே போல, ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை கடன்பெற்ற குறு, சிறு விவசாயிகளுக்கும் குறிப்பிட்ட தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க் கடன் பெற்ற இதர பெரு விவசாயிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும்.
எதிர்வரும் சாகுபடி பருவத்துக்கு கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி நடவடிக்கை மிகவும் பயனளிக்கும். இந்த பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் 14.23 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ.2,044 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். இத்திட்டத்தின் மூலம் 14,22,555 விவசாயிகள் பயனடைவார்கள் என்று தமிழக அரசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


