கேரள முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயனின் வீடு உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் கொச்சின் கனிமவள முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
பினராயி விஜயன் மகள் டி.வீணாவிற்கு சொந்தமான இருப்பது “எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ்” என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு 2018 முதல் 2019 வரையிலான கால கட்டத்தில், கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டைல் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) நிறுவனம், எந்த சேவையும் பெறாமல் ரூ.1.72 கோடி தொகையை வழங்கியதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
இந்த சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குற்றச்சாட்டைத் தொடர்ந்து அமலாக்கத்துறை இந்நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்த பண பரிவர்த்தனைகள் முதலில் வருமான வரித்துறையின் இடைக்கால தீர்வு வாரியத்தின் கவனத்திற்கு வந்ததால், சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது. இதையடுத்து, 2024 ஜனவரியில் நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் தீவிர மோசடி விசாரணை அலுவலகம் மூலம் தனி விசாரணைக்கு உத்தரவிட்டது.
அதே ஆண்டில் அமலாக்கத்துறை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிஎம்ஆர்எல் நிறுவன அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியது. இதற்கு எதிராக அந்த நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியிருந்தது.
இந்நிலையில், அமலாக்கத்துறையின் விசாரணையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், விசாரணைக்கு தடை விதிக்கவும் நீதிமன்றம் மறுத்ததால், அமலாக்கத்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
நீதிபதி டி.ஆர். ரவி உத்தரவில், “தற்போதைக்கு சம்மன் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. இந்த கட்டத்தில் தனியாக எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை” என்று குறிப்பிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இந்த பண பரிவர்த்தனைகளில் பணமோசடி தடுப்பு சட்டத்தை மீறி பணம் மாற்றப்பட்டதா? என்பதையும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
புதிய முதலமைச்சராக பதவியேற்ற வி.டி.சதீசன் அமைத்த சிறப்பு விசாரணைக்குழு அளித்த அறிக்கையின் பேரிலேயே இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.
திருவனந்தபுரத்தில் உள்ள பினராயி விஜயனின் வாடகை வீடு, கண்ணூரில் உள்ள அவரது வீடு மற்றும் சிஎம்ஆர்எல் அலுவலகம் உட்பட 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
சிஎம்ஆர்எல் நிர்வாக இயக்குநர் சசிதரன் கர்த்தாவின் வீட்டிலும் சோதனை நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் அமைச்சரும் பினராயி விஜயனின் மருமகனுமான முகமது ரியாஸின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
வீணா விஜயனின் வாக்குமூலம் தற்போது பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் பினராயி விஜயனின் வாக்குமூலமும் பதிவு செய்யப்படும் என்று அமலாக்கதுறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


