ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலை ஜூன் 1 முதல் உயர்த்தப்பட உள்ளது.
சமையல் சிலிண்டர் விலை உயர்வு, மாவு, எண்ணெய் மற்றும் இதர மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது. இந்த விலை மாற்றத்திற்கு மத்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய கட்டணங்கள் ஜூன் 1 முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருகின்றன.
அதன்படி, சமோசா ஒன்றின் விலை ரூ.12லிருந்து ரூ.20 ஆகவும் வட பாவ் விலை ரூ.13லிருந்து ரூ.20ஆக உயர்த்தப்படவுள்ளது. மேலும், ஆரஞ்சு, சாத்துக்குடி மற்றும் ஆப்பிள் போன்ற பழச்சாறுகளின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
மேலும், சாதாரண பொதுப்பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு குறைந்த விலையில் ரூ.20க்கு ‘எகானமி மீல்ஸ்’ (பூரி உருளைக்கிழங்கு), ரூ.50-க்கு சிற்றுண்டியும் மற்றும் ரூ.3க்கு 200 மி.லி. குடிநீரும் வழங்கும் திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
பிரீமியம் ரயில்களான ராஜ்தானி, சதாப்தி, வந்தே பாரத் போன்ற ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத உணவுகளுக்கான சேவை கட்டணங்கள் முந்தைய நடைமுறையில் உள்ளன.
விலையை உயர்த்துவதோடு மட்டுமின்றி, தரம் மற்றும் சுகாதாரமான மேம்படுத்தப்பட்ட உணவுகளை வழங்கவும் ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நூடுல்ஸ், டோனட், சூப் மற்றும் தோசை போன்ற சில புதிய உணவு வகைகளும் இனி ரயில் நிலைய ஸ்டால்களில் விற்பனைக்கு வரவுள்ளன.
பயணிகள் பயணிக்கும் குறிப்பிட்ட வழித்தடத்தின் உணவுப் பட்டியலை IRCTC eCatering தளம் மூலம் சரிபார்த்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.


