தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து ஜூன் மாதத்திற்கான 9.91 டி.எம்.சி. நீரை திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.
காவிரி நீர் மேலாண்மை கூட்டம் அதன் ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தார் முன்னிலையில் புதுடெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக நீர்வளத் துறை முதன்மைச் செயலர் சத்யபிரத சாகு, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாகப் பங்கேற்றார்.
இதன் போது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி இந்த நீரை உடனடியாகப் பிலிகுண்டுலுவில் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் வலுவாக வலியுறுத்தப்பட்டது.
தமிழகத்தில் தற்போதைய நிலையில் மேட்டூர் அணையின் நீர் இருப்பு 40.742 டி.எம்.சி. ஆக உள்ளது. இதிலிருந்து குடிநீர் மற்றும் சுற்றுச்சூழல் பயன்பாட்டிற்காக வினாடிக்கு 1,003 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக, நடப்பு நீர் ஆண்டில் தங்களால் வழங்கப்பட்ட உபரி நீரையும் மாதாந்திரக் கணக்கில் சேர்த்துக் கொள்ளும்படி கர்நாடகா தரப்பில் கோரப்பட்டது.
ஆனால், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, மழைப் பொழிவால் நீர்த்தேக்கத்தில் தேக்க முடியாமல் தானாகவே வந்தணைந்த உபரி நீரை, வழக்கமான மாதாந்திரப் பகிர்வில் ஈடுகட்ட முடியாது என்று தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக நிராகரித்தது.
இதைத் தொடர்ந்து, பருவமழை மற்றும் கர்நாடக அணைகளின் நீர் வரத்தைக் கருத்தில் கொண்டு, இந்த 9.91 டி.எம்.சி. நீரைத் தடையின்றி வழங்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.


