பிரதமர் மோடியை சந்திப்பதற்காக தமிழக முதல்வர் விஜய் டெல்லி சென்றடைந்தார்.
முதல்வர் விஜய் இன்று காலை சென்னையில் இருந்து டெல்லி செல்வதற்கான பயண ஏற்பாடுகளை உள்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கவனித்தனர்.
இந்நிலையில், சென்னையில் இருந்து இன்று காலை 10 மணிக்கு தனி விமானம் மூலம் புறப்பட்ட தமிழக முதல்வர் விஜய் டெல்லி சென்றடைந்தார்.
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்னர், முதன்முறையாக பிரதமர் மோடியை சந்தித்து பேச டெல்லி சென்றுள்ளார்.
இந்த சந்திப்பின்போது தமிழகம் தொடர்பான கோரிக்கைகளை முதல்வர் விஜய் வலியுறுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேகேதாட்டு விவகாரம், சென்னை மெட்ரோ திட்டம், பிஎம்ஸ்ரீ கல்வி நிதி உள்ளிட்ட தமிழகம் தொடர்பான கோரிக்கைகளை முதல்வர் விஜய், பிரதமரிடம் வலியுறுத்துவார் எனத் தெரிகிறது.
இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியையும், அதன் பிறகு உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் விஜய் சந்திக்கிறார்.
மேலும், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தியையும் அவர் சந்திக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் அவர் திறந்து வைக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.


