மக்களின் நலனுக்காக 400 தனித்துவ உணவகங்களில் வாரத்துக்கு இரண்டு நாள் 5 ரூபாய்க்கு மீன்சாதம் விநியோகிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி வெளியிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் பாஜக 208 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் முதன்முறையாக ஆட்சி அமைத்தது.
மாநிலத்தின் முதல்வராக கடந்த 9ம் தேதி சுவேந்து அதிகாரி பொறுப்பேற்றார். அதன் தொடர்ச்சியாக அவர் இன்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, மேற்கு வங்கத்தில் சுமார் 400 தனித்துவ உணவகங்களில் வாரத்துக்கு இரண்டு நாட்களுக்கு ரூ.5 விலையில் மீன்சாதம் உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்தால், மேற்கு வங்க மக்களின் பிரத்யேக உணவான மீன் உணவுக்கு சிக்கல் ஏற்படும் என மம்தா பானர்ஜி கூறியிருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த அறிவிப்பை சுவேந்து அதிகாரி வெளியிட்டுள்ளார்.
மேலும், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் மதுக்கடைகள் செயல்பட அனுமதிக்கப்படாது எனவும் இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் ரூ.3,000 வழங்கும் அன்னபூர்ணா திட்டத்துக்கான விண்ணப்பங்கள் இன்று (மே 27) முதல் விநியோகிக்கப்படும் என்றும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளைப் பெற அனைத்து இந்தியக் குடிமக்களும் தகுதியானவர்கள் என்று அறிவித்துள்ளார்.
அத்துடன், மேற்கு வங்க மாநில சுகாதாரத் துறையிலிருந்து பிரித்து, தனியாக ‘ஆயுஷ்’ துறையை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


